Su. Samuthiram
ஒன்பது ஆண்டுகளுக்கு முன்பு வெளியிடப்பட்ட நாவல் இது. அதற்கு இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு ’தினகரன்’ நாளிதழில் தொடர்கதையாக வெளியானது. தினகரன் ஆசிரியர் திரு கே.பி. கந்தசாமி அவர்களுக்கும், என்னிடம் இந்த தொடருக்கு ஏற்பட்ட தாக்கங்களை அவ்வப்போது தெரிவித்த நண்பர் சின்னராசுக்கும் நன்றிக்கடன் பட்டுள்ளேன்.இன்னும் நமது மனம் உள்வாங்கிக் கொள்ளாத சென்ற நூற்றாண்டான இருபதாம் நூற்றாண்டில் மருத்துவத்துறையில், உடலை ஊடுறுவி அதன் உறுப்புக்களை கண்ணாடியில் பார்ப்பதுபோல் பார்க்க வைக்கும் ’ஸ்கேனிங்’ என்ற முறையும், உடனடியாகப் படம் பிடித்து, உடனடியாக படம் பிடித்தவரிடமே அவரது உருவத்தையும் பேச்சையும் திரையில் காட்டும் வீடியோ முறைமையும் , இன்டர்நெட் இணையமும் சமூக முறைமையையே தலைகீழாகப் புரட்டி விட்டது என்று சொல்லலாம். இந்த முப்பெரும் கண்டுபிடிப்புகள் சமூகத்தில் மெல்ல மெல்ல மாற்றத்தை ஏற்படுத்தாமல் அடியோடு மனோவேகத்தில் மாற்றங்களைக் கொண்டு வந்துவிட்டன.